Wednesday 13 April 2022

புல்லாங்குழல்


 

உள்ளீடற்றப் புல்லாங்குழலில்

உறைந்துகிடக்கும்

பல்லாயிரம் பாடல்களைப் போல,

உள்ளத்தில் உறங்குகின்றன;

யாரும் அறியாத

எண்ணிலடங்காப் பாடல்கள்.

 

ஒருமுறை நீ

உதடு குவித்து ஊதினாய்!

காற்றேதும் தீண்டி

அந்தத் தடம் அழியாது

காவல் செய்தே

கழிந்தது காலம்.

 

இளமை

தீர்ந்து போனபின்;

இலையுதிர் காலத்து

மரக்கிளைபோல

நினைவின் கோடுகளால்

நிறைந்து கிடக்கிறது மனம்.

 

உள்ளத்தின் வெம்மை தாளாது

உடல் வியர்க்க,

குருதி அடைப்பென

குறி சொல்கிறார் மருத்துவர்.

 

கொழுப்பு!

ஒற்றைச் சொல்லில்

உடல் அளந்தன உறவுகள்.

மதுவோ? புகையோ?

மயக்கத்தில் சில

மனங்கள்.

 

உப்போ? சக்கரையோ?

உழன்ற போதெல்லாம்

உதறிவிட்டுப் போன

சில சொந்தங்கள்.

 

நெஞ்சாங்குலையில் நிறையும்

உன் நினைவுகளால்

திடப்பட்டு ஓடுகிறது குருதி

என்பதை மட்டும்

யாரும் அறிந்திருக்கவில்லை.

 

நீயேனும் அறிவாயா?

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்