Tuesday 5 November 2019

முரண்களின் ஓசை (வள்ளுவர் அவமதிப்பு)


 
மழித்தலும் நீட்டலும் வேண்டா
என்றவனை
மதத்திற்குள் சேர்த்துவிட;
வண்ணங்கள் கைநிறைத்து
வரிசையில் நிற்போரே!!!
உழுதுண்டு வாழ்வாரே உயர்ந்தோர்
என்றவன் கால் வருமோ
பழுதுள்ள பாட்டின் வழி?

எழுத்தாணி இல்லாமல்
சிலை செய்து வைத்தவரை
வாழ்த்தி நின்றவர்காள்!!!
சாணி அடித்ததனால்
எல்லாம் போனதென்று
நீங்கள் புலம்புவதேன்?
உங்கள் நாவினாற் சுட்ட
“வாழும் வள்ளுவரே” என்ற வடு
யாரும் மறப்பாரோ?

இன்றல்ல நேற்றல்ல
பரிமேலழகன் தொடங்கி
பலபேரை பார்த்துவிட்டோம்.

வண்ணங்கள் மாறிவிட – இது
புனைவு மொழியல்ல
புரட்டுக் கதையல்ல.
 
செம்மாந்த தமிழரினம்
வாழ்ந்த பெருவாழ்க்கை
சேர்த்துக்கொடுத்த விழுச்செல்வம்.
 
நீரில் கரையாது
நெருப்பில் வேகாது
பாரில் எவராலும்
பறித்துவிட முடியாது.
ஒருபால் கோடாது
உலகிருக்கும் 
நாள்வரைக்கும் வீழாது.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்