Tuesday, 29 April 2025

பாவேந்தர் பிறந்தநாள் 2025



பேனாவுக்குள் பெருங்கடலை நிரப்பி
எழுதிய சொற்களின் ஈரம் காய
புயலை வேலைக்கு அமர்த்தியவன்.
கேட்கும் நொடியில் பாக்களின்
கேடுகள் களையும் மருத்துவன்,
ஆர்த்தெழும் தமிழால் குருதியில்
ஆற்றலைச் சேர்த்திடும் பாவலன்.
புரட்சிப்பாவலன் எங்கள் புரட்சிப்பாவலன்.
வானம்பாடி வயலுள் மறைந்தன்ன
கழிகடைப் பெண்களின் வீரம்மீள
தீயாய்ச் சொற்கள் கொளுத்தியவன்.
கைம்மை நோற்கும் பெண்களின்
கவலைகள் தீர்க்க முனைந்தவன்
மறுபடி ஒருமணம் புரிந்திட
மனத்தைச் செம்மை செய்தவன்
புரட்சிப்பாவலன் எங்கள் புரட்சிப்பாவலன்.
வேனிற்கால வேம்பின் கிளைபோல
உழவிடை மாந்தர்கள் சீரம்சாய
பெயலாய்ப் பாடல்கள் பாடியவன்.
இயற்கை தன்னைக் காதலால்
இயல்பாய் அணைக்கத் துடித்தவன்
நாட்டுப்புறத்தொடு காட்டுக்குறத்தியை
நல்மணம் செய்ய நினைத்தவன்
புரட்சிப்பாவலன் எங்கள் புரட்சிப்பாவலன்.
=======================
சிராப்பள்ளி ப.மாதேவன்,
29 / 04 / 2023
=======================

Sunday, 20 April 2025

வட்டப்பாலை

சிதம்பரத்திற்குச் சென்று விட்டுத் திரும்பிய வெள்ளிக் கிழமை (18-04 - 2025) இரவு ஒன்பது மணிக்குத் தொடங்கியது தமிழிசை குறித்தான பேச்சு. நண்பர் முத்துக்குமாரசாமியின் வீட்டின் மேசைமேல் கிடந்த வீணை எசு. இராமநாதன் எழுதிய "சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்" என்ற நூலே அதற்குக் காரணம்.

இசையறிவும், இசைக்கருவிகளை வாசிக்கும் திறனும் இசை குறித்தத் தேடலும் கொண்ட நண்பரோடு தமிழிசை குறித்தப் பேசசு என்பது மகிழ்வூட்டுவது. 

ஆப்பிரகாம் பண்டிதர் - அவர் வழி வந்த இசையாசிரியர் தனராசு - அவர் மாணாக்கர் இளையராசா - அவரை உள்வாங்கிக் கொண்ட முத்துக் குமாரசாமி, நினைப்பதை வாசித்துப் பார்த்து விட எதிரே ஒரு கின்னரப்பெட்டி . தாளக் கருவிகள். ஆம் அது ஒரு அழகிய சூழல்.

உறக்கத்தைத் தள்ளி வைத்துவிட்டு நூலைப் படித்துப் பேசுவது, குறிப்பெடுத்து இசைப்பது என மூன்றேமுக்கால் மணி நேரம் கடந்து போனது. ஆனாலும் வட்டப் பாலையின் நுணுக்கம் சிக்காமல் இருந்தது. சரி, காலையில் பார்ப்போம் என உறங்கச் சென்றோம்.

காலையில் ஆறு மணிக்கெல்லாம் நூலைக் கையில் எடுத்துக் கொண்டேன். இசைக்கும் எனக்கும் தொலைவு மிகுதி. தமிழோடு கொண்ட காதலே நூலைப் படிப்பதற்கான உந்துதல். இளங்கோவும், அடியார்க்கு நல்லாரும், அரும்பத உரையாசிரியரும் அள்ளித் தெளித்தத் தமிழ்க் குறிப்புகளில் இசைமலர்கள் சிதறக் கண்டேன். பொறுக்கியெடுத்துக் கோத்துக் கோத்து வட்டப் பாலையைக் கண்டடைந்த போது நண்பரும் விழித்தெழுந்து வந்தார். கண்ட வட்டப் பாலையைக் காதுகளில் சேர்த்தார்.
செம்பாலை அறிந்தோம்.

அடியார்க்குநல்லார் அறிவுறுத்த, குரல் துத்தமாய் நரம்பு மாற கின்னரப்பெட்டியில் வல முறைத் திரிபில் படுமலைப் பாலை பிறந்த போது அடடா... உள்ளம் மகிழ்ந்தது.

குரல் கைக்கிளையாகச் செம்பாலை மெல்ல மெல்லச் செவ்வழிப் பாலையாய் ஒலித்த போது கின்னரப்பெட்டியின் கட்டைகளின்மீது முடத்தாமக்கண்ணியும், ஒளவையும் நாட்டியமாடக் கண்டேன். பாணர்களின் தலையில பொற்றாமரை அணிவித்தக் கரிகாலனும் பேருருவாய் நிற்கக் கண்டேன்.

தமிழிசை குறித்து அறிந்தது மட்டுமின்றி செவிப்புலன் சேர்த்து இன்புற்ற நொடிகள் மகிழ்வானவை. காலம் கூடும் போது எல்லாப் பண்களையும் இசைத்துக் கேட்க வேண்டும். கேட்கும் எல்லாவற்றையும் எழுதும் தமிழையும் யாம் பெற வேண்டும்.

இசைத்தமிழே வாழி.

======================
சிராப்பள்ளி ப.மாதேவன் 
20-04 - 2025
======================

Monday, 31 March 2025

காலத்தின் மடியில்... மூன்றாம் ஆண்டு

 



உன்னைக் கரைத்த
நீரில் மிதக்கின்றன
அன்பின் திசுக்கள்.

உறவுகளின் கண்ணின்
ஓரமெங்கும்
கண்ணீர் தேங்கிய பாசம்.

காற்றில் இன்னமும்
கலையாது தெரிகிறது
கண்டவுடன் புன்னகைக்கும்
உன் முகம்.

Friday, 21 March 2025

உலக கவிதை நாள் 2025



உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்

உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை

தெரிந்துரைப்பது கவிதை.


என்ற,

பாட்டன் எண்ணங்கள் சில

கடன் வாங்கிப்

Thursday, 20 March 2025

தலை நரைத்த குழந்தை.

ஙா... ங்ஙா... என்று

ஒற்றை எழுத்தை

மட்டுமே

உதட்டில் நிறைத்து

கை கால் உதறியபோது;

இரவும் பகலும் 

அன்பொழுக

அத்தனையும் பேசி வளர்த்த

அம்மாவிடம் பேச, 


சொற்கள் தேடி அலைகிறது,

அந்தத்

தலை நரைத்த குழந்தை.

Tuesday, 18 March 2025

🙏 தொழுந்தகை 🙏

 



பழுமரம் நாடா

விழுத்தகைப் பறவை!

முழுமுதற் புலவன்

தொழுந்தகை வள்ளுவன்.

Saturday, 15 March 2025

சந்தித்'தேன்'...




முதலாம் நரசிம்மவர்மன் “சேர, சோழ, பாண்டிய, களப்பிரரை மீண்டும் மீண்டும் போரில் முறியடித்தவன்; பல போர்கள் புரிந்தவன். அப்பெருமகன் பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் நடந்த போர்களில் புலிகேசியைத் தோற்று ஓடச் செய்தவன். புலிகேசி புறமுதுகிட்டு ஓடிய பொழுது ‘வெற்றி’ என்னும் சொல்லை. அவனது முதுகாகிய பட்டயத்தில் எழுதியவன்” என்று கூரம் செப்பேடு இயம்புகிறது.
இதில் காணப்படும் மணிமங்கலப் போர் என்பது பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே, தற்காலக் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் என்ற ஊரில் கிபி 640 இல் நடைபெற்றது. இப்போர் சாளுக்கியர்களுக்கு எதிராக பல்லவர்களுக்கான முதல் வெற்றி கிடைத்த போராகும். மேலும் இரண்டாம் புலிகேசியிடம் பெற்ற நான்கு தோல்விகளுக்குப் பின் பல்லவர்களின் முதலாவது வெற்றியுமாகும். இப்போரில் இரண்டாம் புலிகேசி தோல்வி அடைந்து, பின் வாங்கித் திரும்பினான்.

Tuesday, 11 March 2025

இளையராசா பல்லியப் பெருமழை


இசைச்சிறகு அசைத்தசைத்து
இமயச்சிமை கடந்த
இசைச் செருக்கால்,

அன்னக்கிளி தொடங்கி
ஐரோப்பிய இசைமன்றம் வரை,
நுழையும் இடங்களில் எல்லாம்
விதிகளை மாற்றுகிறாய்.

அந்தப்
பல்லியப் பெருமழை நடுவே
உன் குரலில்
மெல்லென நுழைந்த
“இதயம் போகுதே”
எமைச் சில்லிடச் செய்துவிட,

அல்லவை ஒதுக்கி உனை
அள்ளி முகர்ந்திட்டோம்.

நீ,
எம் மண்ணின் குழந்தை!
எம் மக்களின் இறுமாப்பு!

ஆண்டவன் முன்னே
நெடுஞ்சாண் கிடக்கை
இசைகேட்டு மகிழ்ந்தவர் முன்
கூப்பித் தொழுதகை.

கண்களில் தெரிந்தன
கனிவும் நன்றியும்.
முகத்தில் தெரிந்தது;
எங்கள்
மொத்தப் பெருமிதம்.

வாழி நீ! வாழி! வாழி!! 



Sunday, 9 March 2025

முல்லைக்குத் தேர்கொடுத்து…

 


பல நூறு செடிகொடிகள் இருக்க பாரி ஏன் முல்லைக்குத் தேர் கொடுத்தான்?

மரஞ் செடி கொடிகள் தாமாக வளரும். வெயிலின் போக்கில் தலை உயர்த்தும் மரங்கள். கதிரவனுக்கு முகம் காட்டி வளைந்து நெளிந்து வளர்ந்து நிற்கும் தென்னைமரங்கள் பல்லாயிரம். தலை உயர உயர தண்டு பருத்து வலு சேர்க்கும் செடிகள்.

கொடி என்பது துவளும் தன்மை கொண்ட அல்லது ஒன்றின் மேல் படரக்கூடிய பயிரி ஆகும். பொதுவாகப் பந்தல், கயிறு, வேறு மரங்கள் என வேறுவொரு பொருளின் பிடியுடன் இக்கொடிகள் வளரும். பெரும்பாலன பற்றுக்கொடி வகைகளில், கோணமொட்டுகள், பற்றுக்கம்பிகளாக மாறும். கொடிகள், முறுக்கும் தண்டு, வான்வழி வேர்கள் அல்லது ஒட்டும் வட்டுகளைப் பயன்படுத்தி தங்களைத் தாங்கிக் கொண்டு ஏறுகின்றன இப்படி இறுக்கும் பயிரிகளுக்கு அவை சுற்றிச் செல்லக்கூடிய குறுகிய கொம்புகள் கொண்ட உறுதியான ஆதரவு தேவை. சில கொடிகள், ஒட்டிக்கொள்ள சிறிய வான்வழி வேர்களைப் பயன்படுத்துகின்றன, எனவே அவற்றுக்கு அதிக உதவி தேவையில்லை. பிசின் வட்டுகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் கொடி வகைகளும் உண்டு.

Monday, 27 January 2025

அவன் நடக்கிறான்...



அவன் நடக்கிறான்,

வேகமாக நடக்கிறான்
இன்னும்
செப்பனிடப்படாத பாதையில்.
காலரவம் கேட்டு
குற்றுச் செடிகளின் உள்ளேயிருந்து
பதறி ஓடுகின்றன
பச்சோந்திகள்.
கைவீச்சின் அதிர்வில்
கழன்று விழுகின்றன
சில
தோல் பாவைகளின் முகமூடிகள்.
அடிக்கும் காற்றில்
அவன் முகமூடியும் கழன்றுவிழும்
என்று அச்சுறுத்துகிறது ஒரு குரல்.
போகட்டும்...
நடப்பதற்குச் சொந்தமாகப்
பாதையேனும் எங்களுக்கு மிச்சமிருக்கும்.
உங்களுக்கு?
பதிலுரைக்கின்றன பல குரல்கள்.
அவன் நடந்துகொண்டேயிருக்கிறான்.
காலம் காத்து நிற்கிறது.

Friday, 3 January 2025

திருவிழா

 


குழந்தைகள்
திருவிழாக்களில்
தொலைந்து போவார்கள்.
நானோ ,
எங்கெங்கோ தொலைந்து போய்,
ஒவ்வொரு முறையும்
இந்தத் திருவிழாவில்தான்
மீட்கப்படுகிறேன்.