Thursday, 27 November 2025
மூதில் மகளிர்
Tuesday, 18 November 2025
பெரியவர் வ.உ.சி. நினைவேந்தல் 2025
மண்ணின் விடுதலையைக்
கண்ணில் காணாது
இன்னுயிர் நீங்கும்
இறுதி நாள்!
கண்பட வெளியே
கனன்றெரியும் விறகு,
புண்பட்டு உள்ளே
நொந்தெரியும் உள்ளம்.
இன்னும்,
எத்தனைக் காலம்
அடுப்படிச் சிறையில்
உழலும் வாழ்க்கை?
அன்றைய நாட்களின்
பெண்களின் நிலைமையை
எண்ணியபடியே
கண்ணீர் உகுத்தது
பெரியவர் உள்ளம்.
குறள் உரைக்க இயலாத
தன்
குரல்வளையின் மீதும்,
ஆற்றாமை குழைந்த ஏக்கம்.
கூற்றுவன் வாயிலில்
நின்றிருக்கும் போதும்,
நாடும் மக்களும்
நற்றமிழ்க் குறளும்
நெஞ்சில் சுமந்தே
விடுதலை பெற்றது
பெரியவர் ஆவி.
வாழ்க நீ எம்மான்!
வையத்து நாட்டிலெல்லாம்.
வாழி! வாழி!
Monday, 17 November 2025
புகைவண்டிச் சாரளம்
Wednesday, 12 November 2025
கல்லும் புல்லும்
Saturday, 1 November 2025
உன்னை நினைக்கையில்...
எனது முதல் நூல் அச்சாகி வீட்டின் அரங்கிற்குள் வைத்தபோது, நீ படமாகிப்போய் ஐம்பது நாட்கள் ஆகியிருந்தது. என் நூல் வெளியாகும் என்ற எந்த அறிகுறியும் நீ அறிந்திருக்கவில்லை, வெளிப்படுத்தாமல் போன பிழை என்னுடையதுதான். அதனால் அதில் உனக்கு எந்த வருத்தமும் இருந்திருக்காது. ஆனால், எனக்கு...
எனது ஆறாவது நூலும் வெளிவரப்போகின்றது. ஆகச் சிறந்த ஒரு நேர்மையாளரின் நூலுக்கு உரை எழுதியிருக்கிறேன். நீ இருக்கும் போதே இவையெல்லாம் நடந்திருந்தால் மகிழ்ந்திருப்பாய் என்று எண்ணுகிறேன். உன் மனப்பாங்கை அப்படித்தான் நான் உணர்ந்திருக்கிறேன். உன் நண்பர்களும், சுற்றமும் சொல்லக் கேட்டிருக்கிறேன். உன்னிடமிருந்து வெளிப்படும் கேள்விகள் அத்தனைக் கூர்மையானவை. எடுத்த சில முடிவுகள் கடினமானவை.
கல்லூரியிலும், விடுதியிலும்; நீ அறியாது உன் பெயரெழுதி உன் கையெழுத்தை இட்டபோதெல்லாம் உள்ளத்தின் ஓரத்தில் அச்சமும், மெல்லிய பதற்றத்தையும் உணர்ந்திருக்கிறேன். இப்பொழுதோ நூலட்டையில் தந்தை என உனது பெயரைப் பார்க்கையில் பெருமிதம் கொள்கிறேன், உன்னிடம் சொல்ல முடியாமல் தவிக்கிற மெல்லிய வருத்தத்தோடு...
01-11-2025
Wednesday, 29 October 2025
மெய்யற விளக்கவுரை
Sunday, 19 October 2025
அடுநறாக் காமம்
Wednesday, 1 October 2025
இனியவை 25 - சிறுகதை தொகுப்பு
கொற்றவை முன்செல்ல;
தோழர் தி.மா.ச. நினைவேந்தல்
காலை நேர மேற்குவானில் வெள்ளை யானை ஒன்று தும்பிக்கையைத் தூக்கி நீர் பீய்ச்சுவது போன்ற மிகச் சரியான தோற்றம் கண்டு, குழந்தைக்குக் காட்டிவிடவேண்டுமென்று வீட்டுக்குள் ஓடிச் சென்று குழந்தையைத் தூக்கி வந்து காட்ட முனைகையில் காற்றில் கலைந்து போன மேகத்தைப்போல காற்றோடு போய்விட்டது தி.மா.சரவணன் அவர்களின் பெருவாழ்வு. எதற்கு என்னைத் தூக்கிக்கொண்டு இவ்வளவு வேகமாக ஓடிவந்தாய் என்ற கேள்வி நிறைந்த குழந்தையின் பார்வைக்கு விடைசொல்லத் தெரியாமல் விழிபிதுங்கும் தந்தையின் நிலையில் என் போன்றோர் உள்ளம்.
Friday, 26 September 2025
வீரவணக்கம்
Thursday, 21 August 2025
இல்லாதது
எப்பொழுதும்
இல்லாதவற்றின் மீதே
பேராவல் எழுகிறது.
பெருநகர அடுக்ககத்தின்
பேதை மனத்தில்
தற்சார்பும்,
சிற்றூர்க் குறுந்தெருவின்
சீரிய மனத்திலெழும்
அடுக்ககக் கனவும்.
Wednesday, 13 August 2025
தண்டமிழ்ப் பாடல்
முன்பே எழுதிய ஒரு பாடல் செய்தெள்ளிகை (Artificial Intelligence) உதவியால் இசையமைக்கப்பட்டது. பாடல் வரிகளுக்கு நிகரான காட்சி அமைப்புகளை எழுதிய பின் செய்தெள்ளிகை உதவியால் காட்சிகளாக உருமாற்றப்பட்டு அனைத்தையும் இணைத்த விழியம் இது.
Sunday, 20 July 2025
செம்மலின் நேர்மை
(இணைக்குறள் ஆசிரியப்பா)
வான்வளி தன்தொழில் மறந்து வானின்று
தான்பொழி நன்முகில் பொய்த்து நெடும்புனல்
அழுவத் துநீர்மை குறைந் திடினும்
விழுமியர் வஉசி உளங் கொண்ட
நேர்மை குன்றா தென்பது
சீர்மை மிக்க உயர் வாழ்வால்
அறிந்த திவ்வுல கவர் தீரா
உறுதியொ டுவாழ்ந்து மறைந்த பின்னே.
நெடுங்கடல் வ.உ.சி
மேலே சீறும் பேரலைகள்,
அடிவயிற்றில்
அறிவின் பேரமைதி.
உதவும் மனத்தொடு
உப்பு தொடங்கி
ஓருநூறு பொருட்கள்.
முத்து பவளமென
ஆழிப் பெருஞ்செல்வம்.
உவர்நீர் நடுவே
நன்னீர் போலே
சொத்திழந்த போதும்
விருந்தளித்த மேன்மை.
கண்ணூர்ச் சிறையின்
கம்பிகளுக்கு நடுவே
வரும்
தலைமுறைக்குக் கையளித்தத்
தமிழ்ச்செல்வம்.
உணவும் இடமும்
உடுத்தும் உடையும்
நிலையில்லாதபோதும்
உரிமை இழந்தவர்
குரலாய் ஒலித்த வீரம்.
பெரியவர் வ.உ.சி
அரிய நெடுங்கடல்.
மூழ்கி எழுவோருக்குப்
படுபொருட்கள் ஏராளம்.
நாம்தான் இன்னும்
முழுவதையும் கண்டடைந்தோமில்லை.
Monday, 14 July 2025
நானே... பெய்தேன்
Friday, 11 July 2025
கண்ணகிக் கோட்டம் - எது மெய்?
முனைவர் துளசி. இராமசாமி எழுதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1987ல் வெளியிட்ட மங்கல தேவி கண்ணகி கோட்டம் (நாட்டுப்புறவியலார் அணுகுமுறை) எனும் நூலில்,
Thursday, 19 June 2025
திறவுகோலைத் தொலைத்துவிடுங்கள்
Saturday, 14 June 2025
தேயா மலை
Monday, 9 June 2025
மாம்பாலும் வைகாசி விசாக நாளும்
சென்னையில், ஒரு மணி நேரமாகப் பெருங்காற்றுடன் பெய்து கொண்டிருந்த சிறு மழையும் ஓய்ந்து மெல்லிய தூறல் விழுந்து கொண்டிருக்கிறது. மாலை நேரத்து மென் குளிர். படித்துக் கொண்டிருந்த புத்தகப் பக்கங்களுக்கிடையே, உருகிய சருக்கரையில் குழையும் சுக்கின் நறுமணம். கூடவே குமுளிமெட்டின் ஏலக்காய் உடைந்து, கொதிக்கும் அரிசிமாவில் சுருண்டு சுருண்டு எழுந்து காற்றில் தெளிக்கும் நறு நாற்றம். அடுக்களை நோக்கி நடக்கிறேன். உருளியில் மாம்பால் கொதித்துக்கொண்டிருக்கிறது. மெல்லிய நார் கொண்ட மாம்பழத் துண்டுகள் கூழில் மேலெழுந்து மேலெழுந்து அடங்குகின்றன.
Friday, 6 June 2025
இத்தனைக் கண்களா? 👀
திரு "சாம்பசிவம் பிள்ளை" தொகுப்பித்த மருத்துவம் மற்றும் அறிவியல்; ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி, சித்தமருத்துவத்தில் கண் தொடர்பான சொற்களை வகைப்படுத்தும் போது ஐம்பத்தியோரு வகையான கண்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறது.
. கண்களின் பெயர்கள்
. ==================
கருடக்கண்,
காக்கைக்கண்,
முண்டைக்கண்,
ஆந்தைக்கண்,
யானைக்கண்,
பூனைக்கண்,
மீன்கண்,
ஓரக்கண்,
Tuesday, 20 May 2025
மரண வாயிலில் இருந்து...
Monday, 19 May 2025
புத்தகத்திற்கு இப்படியொரு உவமை!
பொதுவாகவே புத்தகம் எனப்படுவது கருத்தாழம் மிக்கதாக இருக்க வேண்டும். அதன் செறிவு படித்து முடித்த பின் உள்ளத்துள் பொருள் சுரந்து அறிவை விரிவு செய்ய வேண்டும்.
அதற்காக; சிக்கலான சொற்களால் எளிதில் படிக்க இயலாமல் இருக்கக் கூடாது. பல புத்தகங்களின் பொதுப்பொருள் படிக்க எளிதாகவும், அதன் உட்பொருள் உணர்ந்து உள்வாங்க அரிதாகவும் இருக்கும்.
இந்தக் கருத்துக்கு ஓர் உவமை சொல்லி எழுதப் பெற்ற நாலடியார் பாடல் ஒன்று வியக்க வைத்தது. உலகியல் அறிந்து எழுதிய பாடல் இது.
பொருளுரை: பெறத்தக்கப் பொருள்களைப் பெற்றுக்கொள்கிற பொதுமகளிர் தோள்போல, ஒரு மேம்போக்கான நெறிப்படி படிப்பவர் எல்லோருக்கும் நூலின் பொதுப் பொருள் எளிதில் விளங்கும். ஆனால் தளிரை ஒத்த மேனியையுடைய அந்தப் பொதுமகளிரின் மனத்தைப் போன்று, நூலின் உள்ளே பொதிந்து கிடக்கும் நுண்பொருள் அறிதற்கு அரிதாம்.
பொது மகளிர் விரும்பி அதைச் செய்யவில்லை என்பதையும், அவர் நெஞ்சுக்குள்ளே பல கனவுகள், மனக்காயங்கள் இருக்கின்றன என்பதையும் கருத்தில் கொண்டே இந்த உவமை சொல்லப்பட்டிருக்கிறது. நூலின் உட்கருத்தை அறிய நூலாசிரியரின் போக்கிலேயே, அவரின் காலத்திற்கே சென்று படிக்க வேண்டும். அதுவே சரியான நெறியாகும்.
செவ்விலக்கியப் பரப்பில் பாக்கள் மிகுதி. பல குறட்பாக்களின் வழியாக இந்த துய்த்தலின்பத்தை வள்ளுவர் அடிக்கடி வழங்குவார்.
பொதுமகளிர், பரத்தை போன்ற சொற்பயன்பாடுகளில் சிலருக்கு ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால், “மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி: (அகநானூறு 146). என்ற வரியிலிருந்து பரத்தன் என்ற சொல்லும் வழக்கிலிருந்தமை அறிய முடிகின்றது.
Wednesday, 7 May 2025
இயலுமா?
மலர்கிறோம் என்பதை
மலர்கள் அறியுமா?
பாய்கிறோம் என்பதை
அருவிகள் உணருமா?
ஓடும் ஆறுகள்
ஓய்வினைத் துய்க்குமா?
தேங்கிய ஏரிகள்
ஓடிட எண்ணுமா?
நூறு கூறாய் நொடியைத் துணித்த,
இம்மியளவு இடைவெளியில்;
உள்ளில் கிளர்ந்த
மகிழ்வின் நிகழ்வை,
மறுபடியொருமுறை
மனம் பெற இயலுமா?
Saturday, 3 May 2025
கூட்டுப்புழு
இலைகளின் மீது
கவிதைகளாய்ப் படரும்
தூவானக் கண்ணாடிகளில்
முகம் பார்க்கக்
காத்துக் கிடக்கின்றன,
இலைகளின் முதுகில்
கூட்டுப் புழுக்களாய்…
பட்டாம் பூச்சிகள்.
03-05-2025
Tuesday, 29 April 2025
பாவேந்தர் பிறந்தநாள் 2025
Sunday, 20 April 2025
வட்டப்பாலை
Monday, 31 March 2025
காலத்தின் மடியில்... மூன்றாம் ஆண்டு
Friday, 21 March 2025
உலக கவிதை நாள் 2025
உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.
என்ற,
பாட்டன் எண்ணங்கள் சில
கடன் வாங்கிப்
Thursday, 20 March 2025
தலை நரைத்த குழந்தை.
ஙா... ங்ஙா... என்று
ஒற்றை எழுத்தை
மட்டுமே
உதட்டில் நிறைத்து
கை கால் உதறியபோது;
இரவும் பகலும்
அன்பொழுக
அத்தனையும் பேசி வளர்த்த
அம்மாவிடம் பேச,
சொற்கள் தேடி அலைகிறது,
அந்தத்
தலை நரைத்த குழந்தை.












.jpeg)










